திங்கள், 30 மார்ச், 2009


ஆமையின் மரணம்..

ஓடு பிளந்து கிடக்கிறது
கரியசெங்குருதி பிசுபிசுக்கிறது
தலை பிதுங்கித் தெரிகிறது
கால்கள் திசையற்று பிரிந்து கிடக்கின்றன..

ஒரு ஆமை இறந்து கிடக்கிறது.

அது யாரைத் தீயிட்டது?
யாரை வஞ்சித்தது ?
யாரைபப் பழிதீர்த்தது?
யார் முதுகில் கடித்தது?

உங்கள் காலடி ஓசைகளுக்கே அது அஞ்சியதே!
உங்கள் நிழல்களே தன்னை சுடும் என்று
ஐம்புலன்களும் ஓட்டுக்குள் ஒடுக்கியதே!
பசிய புற்களை பசிதீர்க்க மென்றபோதுகூட
அது சத்தமிட்டதில்லை.

தெருக்களின் சந்துகளில்
நீங்கள் களவாடியபோது,
வன்புணர்வு கொண்டபோது,
பழிதீர்த்துகொண்டபோது,
அது தெருவைக்கூடக் கடந்ததில்லை.

பின் எதனால் அதைக் கொன்றீர்கள்?





ஞாயிறு, 29 மார்ச், 2009

விடை கொடல்







நான்
புறப்பட்டுப் போகையில்,


சீக்கிரம் வந்துவிடு என்று சொல்லிக்


கலங்கும் உன் விழிகளின் ஈரத்தில்


கரைந்துபோகிறது


வெளி, தூரம், நேரம் எல்லாம் ...


திங்கள், 23 மார்ச், 2009



யாரோ கடந்து செல்கிறார்கள் என்னை...

நான் நிமிர்ந்து பார்ப்பதில்லை எதையும்.

யாரோ கூப்பிடுகிறார்கள் என் பேர் சொல்லி..

நான் திரும்பிபார்பதில்லை யாரையும்.

நான் உயிர்வாழ ஆசையாய் உள்ளேன்.

நான்.. நான்..

பார்க்கமாட்டேன் எதையும்.

வெள்ளி, 20 மார்ச், 2009

நீ என்னும் கோப்பையில்


நான் பருகுவேன்


வாழ்வென்னும் தேன் ...